Friday, July 22, 2011

தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு - பொதுக்குழு கூடுகிறது : இன்றும் நாளையும் நடைபெறுகிறது !

இது குறித்து பொதுச் செயலாளர் பேராசிரியர்  வெளியிட்டுள்ள  அறிவிப்பு வருமாறு:-
 
தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் இன்று 
23 .7 .2011 (சனிக்கிழைமை) மாலை 4 .00 மணியளவில் 
தி.மு.க.செயற்குழு கூட்டம் மற்றும் நாளை 24 .7 2011  (ஞாயிற்றுக் கிழைமை) காலை 10 .00 மணியளவில்  தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோவை மாநகர், திருச்சி ரோடு, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள அறிஞர் அண்ணா வளாகத்தில் நடைபெறும்.
 
அதுபோது தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
 
பொருள் : கழக ஆக்கப் பணிகள்
க.அன்பழகன்,
பொதுச் செயலாளர்
தி.மு.க.

Monday, July 11, 2011

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு

1993 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவனத்திட மிருந்து,தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக 20 இலட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் அரசுக்கு 6.5கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா உள்ளிட்ட 10பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதாவும் மற்றவர்களும் இணைந்து கூட்டாக சதி செய்து தரம் குறைந்த நிலக்கரியைத் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இறக்குமதி செய்து பெரும் இழப்பை ஏற்படுத்தினார்.இது தொடர்பான வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. அதன்பின், சாட்சிகள் விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
 
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.ஆனால்,அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ், ஆர்.சி.லகோட்டி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை எதிர்கொள்ளும்படி ஜெயலலிதாவுக்கு ஆணையிட்டது.

Sunday, July 3, 2011

சில ஏடுகளில் வெளிவந்துள்ள செய்தி குறித்து - ஒரு விளக்கம்!

பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த
மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் 
பொறியியல் கல்லூரியில் சேரலாம்
என்கிற விதிமுறையை கலைஞர் அரசுதான் அன்றைக்கு ஏற்படுத்தியது!
"எஞ்சினியரிங் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்தியதற்கு சென்னை ஐகோர்ட் தடை -ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி" என்று "தினத்தந்தி"நாளேடு கோட்டை எழுத்துகளில் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள்,முதல் முறையாக பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது தி.மு.க.அரசுதான்.

பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், அவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம் என்று விதிமுறை ஏற்படுத்தியது தி.மு.க.அரசுதான்.

2008 - 2009 ஆம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை தி.மு.க.அரசு அனைத்துப்  பிரிவினருக்கும்  குறைத்து  ஆணையிட்டதன்படி,பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 55 விழுக்காடு என்பதை 50  விழுக்காடு  எனவும் பிற்படுத்தப்பட்ட  கிறித்தவ வகுப்பினர்,பிற்படுத்தப்பட்ட  முஸ்லிம்  வகுப்பினர்,இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த  மதிப்பெண்கள் 50 விழுக்காடு என்பதை 45 விழுக்காடு எனவும்-மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 45 விழுக்காடு என்பதை 40 விழுக்காடு எனவும்-பட்டியல்  இனத்தவர் மற்றும் மலைவாழ்  பழங்குடியினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தேர்ச்சி இருந்தால் போதும் என்பதை 35 விழுக்காடு எனவும் தி.மு.க.அரசு குறைத்ததால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால் 2011 - 2012 ஆம் ஆண்டிற்கு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் 50 சதவிகிதமும், இட ஒதுக்கீடு செய்யப்பட்ட வகுப்புகளைச்  சார்ந்த மாணவர்கள் 45 சதவிகிதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்  என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம் பொதுத் தேர்தலுக்கு முன்பே ஓர் அறிவிப்பினைச் செய்தது.

அந்த அறிவிப்பு வந்ததும்,தமிழக அரசின் சார்பில் தி.மு.க.அரசு இருந்தபோதே  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு -அதனை தமிழகத்தில்  இந்த ஆண்டு அமல்படுத்தமாட்டோம்  என்று முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள்  அறிவித்ததோடு,மத்திய அரசுக்கு அது பற்றி திட்டவட்டமாக அப்போதே  தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஜெயலலிதாதான் மத்திய அரசின் அறிவிப்பினை எதிர்த்து நடவடிக்கை எடுத்ததைப் போலவும், சென்னை உயர்நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு விட்டது போலவும் செய்தி வெளியிட்டதோடு,  அதற்காக ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி  தெரிவித்ததாகவும் சில ஏடுகள் அதை மிகைப்படுத்தி  புகழ்ந்திருக்கின்றன.
ஆனால் இட ஒதுக்கீட்டின் கீழே பொறியியல் கல்லூரியில் நுழைய விரும்புகின்ற மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து அவர்களை அந்தக் கல்லூரியிலேயே பயில வசதி செய்தி கொடுத்தது தி.மு.க.அரசுதான் - முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தான் என்பதை அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.

நன்றி : முரசொலி